இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா?
இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன்.
பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங்கிலாந்தை சேர்ந்தோரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் அமெரிக்கரும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால் அமெரிக்கர் தம்மை இங்க்லிஷ்காரர்கள் என அழைப்பதில்லை.
இவ்வாறு பல உதாரணங்களை உலகில் காண முடியும்.
அதே போல் ஒரே மொழி பேசினாலும் மதம், கலாசார ரீதியில் தாங்கள் தனியான இனம் என சொல்லும், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களும் உண்டு. உதாரணமாக இந்தியாவின் சீக்கிய இனத்தவர்களை சொல்ல முடியும். இவர்கள் பஞ்சாபி மொழி பேசுவதால் இவர்கள் பஞ்சாபி இனமாக கருதப்படாமல் தாமாக உருவாக்கிய சீக்கிய மதத்தை பின் பற்றுவதால் சீக்கிய இனத்தவராகவே நோக்கப்படுகின்றனர்.
இந்த வகையிலேயே இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசினாலும் சிங்கள மொழி பேசினாலும் மலாய் பாஷை பேசினாலும் "முஸ்லிம்கள்" என்ற தேசிய இனமாகவே கருதப்படுகிறார்கள். இது விடயத்தில் எமது முன்னோர்களின் தூர நோக்கு பாராட்டுக்குரியதாகும். காரணம் அன்று அவர்கள் இசுலாமிய தமிழர்கள் என்ற வார்த்தையை ஏற்றிருந்தால் இன்று தென்னிலங்கை முஸ்லிம்களில் சிலர் தமிழ் கொஞ்சமும் தெரியாமல் சிங்களம் பேசும் நிலையில் அவர்களை இசுலாமிய சிங்களவர்கள் என்ற சொல்லுக்குள் புகுத்தி தமக்குடையிலும் பிளவுகளை கண்டிருப்பர். எவ்வளவுதான் இந்த முஸ்லிம்கள் தமக்கு தமிழ் சுத்தமாக தெரியாது சிங்களமே பேசுகிறோம் என கத்தினாலும் சிங்கள மக்கள் இவர்களை சிங்களவர்களாக ஏற்பதில்லை, மாறாக முஸ்லிம்கள் என்றே பார்ப்பதால் முஸ்லிம்கள் மொழிக்கப்பால் மதம் சார்ந்த தனியான இனம் என்பதை சிங்களவர்கள் ஏற்றுள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது.
அதே போல் தமிழ் போராளிகள் முஸ்லிம்களை வேறாகப்பிரித்து கொலைகள் பல செய்ததன் மூலம் முஸ்லிம்களை தனியான இனமாகவே பார்த்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இது விடயத்தில் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் தனித்துவமே வெளிக்காட்டப்படுகிறது. ஒரு தமிழர் கனடா, ஐரோப்பிய நாட்டில் குடியேறினால் அவரின் இரண்டாவது தலைமுறை தமிழை மறந்து அந்நாட்டு பாசையையே பேசுகிறது, அம்மொழியிலேயே சிந்திக்கிறது. ஆகவே தமிழ் தெரியாத அத்தலைமுறை தமிழன் என்ற வார்த்தைக்கு பொருத்தமற்றதாகி விடுகிறது. ஆனால் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் எந்த நாட்டில் குடியேறினாலும் அவரது பரம்பரையினர் தமிழ் மொழியை மறந்தாலும் அவர்கள் முஸ்லிம்கள் என்றே அழைக்கப்படுவர்.
ஆகவே இலங்கை முஸ்லிம்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை இலங்கை கிறிஸ்தவ தமிழர், கிறிஸ்தவ சிங்களவர் என்பதை வைத்து பார்ப்பது கூடாது என்பதுடன் இதனை முஸ்லிம்கள் ஏற்கவுமாட்டார்கள். அண்மைய போர்ச்சூழலில் கிறிஸ்தவ சிங்களவர் கிறிஸ்தவ தமிழர்களை கொன்ற வரலாற்றை கண் முன் கண்டுள்ளோம். ஆனால் முஸ்லிம்களின் முன்னோர் செய்த அர்ப்பணிப்பு காரணமாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இப்படி இல்லை என்பதுடன் நாம் எப்போதும் இலங்கை முஸ்லிம்கள் என்ற அடையாளப்படுத்தலையே விரும்புகிறோம் என்பதையும் அறபு கலந்த தனியான தமிழ் மொழி, தனியான மதம், தனியான கலாச்சாரம் கொண்ட இறைமையுள்ள தனியான தேசிய இனம் என்பதை சகலருக்கும் மீண்டும் சொல்லி வைக்கிறோம்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி

Post a Comment