BREAKING NEWS

அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்ல நேரிடும் - பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்ல நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் தொனியில் எச்சரித்தார் என வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நான் பல முறைப்பாடுகளை செய்தேன்.

கள்வர்களை பிடிப்பதாக நான் மக்களிடம் வாக்குறுதி அளித்தேன். ஊருக்கு செல்லும் போது கள்வர்களை பிடித்து விட்டீர்களா என ஊர் மக்கள் கேட்கின்றார்கள்.

நான் இதய சுத்தியுடன் பேசினேன். எனக்கு சந்தர்ப்பம் வழங்கினால் கள்வர்களை ஆதாரங்களுடன் பிடிக்க முடியும்.

கும்பிடப் போன கோயிலின் கூரை தலையில் விழுந்தது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 1956ம் ஆண்டு வோல்டர் தல்கொட பிட்டியவின் அறிக்கைக்கு அமைய அமைச்சரவை அமைச்சர்கள் ஐந்து பேரின் குடியுரிமையை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்க பறித்திருந்தார்.

அன்று வழக்கு விசாரணை நடைபெறவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் எனவே அவரது உத்தரவுகளை மறுக்க முடியாது.

இதேவேளை,அரசாங்கத்தை விட்டு வெளியேறச் சொன்னால் வெளியேற நேரிடும். எனினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி என்னால் குரல் கொடுக்க முடியாது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar