வானியலின் அறிவிப்பை ஏற்று இன்று சந்திர கிரகணம் ஏற்படும் என்றும் அதன்படி சந்திரகிரகரண தொழுகை தொழும்படியும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா கூறிவிட்டு பிறை விடயத்தில் மட்டும் வானியல் அறிவிப்பை ஏற்க முடியாது என சொல்வது உலமா சபையின் முரண்பட்ட கொள்கையை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
சந்திரன், பிறை போன்ற விடயத்தில் முஸ்லிம்களுக்கு தெளிவான வழிகாட்டலை செய்ய வேண்டிய உலமா சபை தொடர்ந்தும் தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக்கொண்டிருப்பது கவலையான விடயம்.
சந்திரன் என்பது பிறை என்பதும் முழு உலகுக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இன்று பிறை 14 பூரண சந்திரனின் நாளாகும் என்பதை முழு உலகும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை உலமா சபையும் ஏற்றுக்கொண்டு இன்றைய பௌர்ணமியில் ஏற்படும் சந்திர கிரகணம் சம்பந்தமாக வானியல் அறிவிப்பை தேவ வாக்காக ஏற்று கிரகரண தொழுகை தொழும்படி அறிவித்தும் உள்ளது. அதே வேளை உலமா சபையால் வெளியிடப்பட்டுள்ள இம்மாதத்துக்கான பிறைக்கலண்டரில் இன்றைய சந்திர திகதி 13 என குறிப்பிட்டுள்ளதன் மூலம் ஜம்மிய்யத்துல் உலமா நகைப்புக்குள்ளாகியுள்ளது.
ஆக இம்மாத பிறை காணுதல் என்பது ஒரு நாள் தாமதித்தே உலமா சபை கண்டுள்ளதே தவிர பிறை தாமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
பிறை தெரியலாம் என வானியல் அறிக்கையை பெரிதும் கணக்கில் எடுக்காமல் சந்திர கிரகண விடயத்தில் மட்டும் வானியலை ஏற்பதற்கு முன் வந்தது ஏன்? நபியவர்கள் சந்திரகிரகணம் ஏற்படுவதை கண்ணால் கண்ட போதுதான் தொழுகைக்கு அறிவித்தார்களே தவிர காணும் முன் கேள்விப்பட்டதன் அடிப்படையில் கிரகணத்தொழுகை தொழவில்லை.
பிறை விடயத்தில் கண்ணால் காண வேண்டும் என பிடிவாதம் பிடிப்போர் கண்ணால் காணும்முன் சந்திர கிரகணத்தை அறிவித்துள்ளமை வேடிக்கையானது.
எனினும் வானியலை வைத்து இன்றைய சந்திரகிரகணத்தை உலமா சபை அறிவித்ததை நாம் தவறாக காணவில்லை. ஆனாலும் இதே அறிவை ஏன் பிறை விடயத்திலும் செயற்படுத்த முடியாது என்றுதான் கேட்கிறோம்.
பிறை என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படாது. அவ்வாறு வித்தியாசப்படும் என்றிருந்தால் இன்று உலகம் முழுவதும் பௌர்ணமியாக இருக்காது.
ஆகவே பிறை பற்றிய தெளிவான அறிவு ஜம்மிய்யத்துல் உலமாவிடம் இன்னமும் இல்லை என்பதால் இது விடயத்தில் மாதாமாதம் பிறைக்கலண்டரை வெளியிட்டு மக்களை குழப்புவதை தவிர்த்து இது விடயத்தில் உலகளாவின் முஸ்லிம் உம்மத்தின் தலைநகரான மக்காவின் பிறை அறிவித்தலையும் மக்காவின் உம்முல் குறா கலண்டரையும் ஏற்க முன் வர வேண்டும் என உலமா சபை அறை கூவல் விடுக்கின்றது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


Post a Comment