2010ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 9 வருடங்களில் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படவில்லை.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து விண்ணப்பமும் பெறப்பட்டு பரீட்சை கட்டணமும் செலுத்தப்பட்ட பின் மௌலவி ஆசிரிய நியமனத்தை அமைச்சரவை ரத்து செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பாக மௌலவிமாருக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய அநியாயமாகும்.
இலங்கை வரலாற்றில் பிரித்தானியர் காலத்திலிருந்து மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் பணி இஸ்லாம், மற்றும் அரபு மொழி போதனையாகும்.
1992ம் ஆண்டுக்கு பின் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாமல் இருந்தது. 1994ம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பெரு உதவியுடன் சந்திரிக்கா அரசு வந்தது. வந்ததும் செய்த வேலை பாடசாலைகளில் மாணவர்களுக்கென தனிப்பாடமாக இருந்த அரபு பாடத்தை விருப்ப பாடமாக்கி அதனை அனைத்து மாணவர்களும் கற்காத ஒன்றாக மாற்றியது. இந்த அநியாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் தன் பதவிகளை காப்பாற்ற பார்த்துக்கொண்டிருந்தது. அத்துடன் மௌலவி ஆசிரிய நியமனம் எத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை.
உலமா சபைகள் கெஞ்சின. இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிக்கை மேல் அறிக்கை விட்டது. உலமாக்கள் ஒத்துழைப்புடன் ஆட்சிபீடம் ஏறிய முஸ்லிம் காங்கிரஸ் உலமாக்களை உதைத்துத்தள்ளியது.
2000ம் ஆண்டு ஹக்கீம் தலைவரானார். கல்முனை ஹாமியாவில் அம்பாரை மாவட்ட உலமா சபை அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு விழாவை ஏற்படுத்தி மௌலவி ஆசிரிய நியமன கோரிக்கையை முன் வைத்தது. இதோ செய்து தருகிறேன் என சொன்னவர் காணாமல் போய் விட்டார்.
இதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்டது. மௌலவி ஆசிரிய நியமனத்தை அரசியல் மயப்படுத்தியது. அந்த வருடம் வந்த ஜனாதிபதி தேர்தலில் வேற்பாளர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் உலமா கட்சி ஆதரிப்பதாயின் இந்நியமனத்துக்கு பகிரங்க உத்தரவாதம் தரப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தது.
மௌலவி ஆசிரிய நியமனத்தை இவ்வாறு உலமா கட்சி அரசியல் மயப்படுத்தியதை தொடர்ந்து சில முஸ்லிம் சிவில் இயக்கங்களும் இதற்காக முயற்சி செய்தன.
இறுதியில் உலமா கட்சியினால் சுமார் 300 மௌலவிமார் அலரி மாளிகைக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் முன்பாக தான் ஜனாதிபதியானால் மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவேன் மஹிந்த பகிரங்க உத்தரவாதம் தந்தார்.
ஆனால் அவர் வென்றபின் இது விடயம் கிடப்பில் போடப்பட்டது. உலமா கட்சி சும்மா இருக்கவில்லை. 2006ம் ஆண்டு நூறுக்கு மேற்பட்ட உலமாக்களை திரட்டி கல்முனையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தையும் கண்டன கூட்டத்தையும் நடத்தியது.
ஆனாலும் அரசாங்கம் அசையவில்லை. பின்னர் 2008 கிழக்கு மாகாண தேர்தல் வந்த போது அரசு உலமா கட்சியின் ஆதரவை நாடிய போது மீண்டும் உலமா கட்சி இந்நியமனத்தை நிபந்தனையாக்கியது. ஆகக்குறைந்தது கொஞ்சப்பேருக்காவது வழங்க வேண்டும் என கோரியது. மேலும் சில சிவில் இயக்கங்களும் ஒத்துழைப்பை வழங்கின.
கடைசியில் தேர்தல் காலம் என்பதால் அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பிக்கப்படும் என பெசில் ராஜபக்ஷ உத்தரவாதம் தந்தார். அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதுவும் இலேசாக அல்ல. ஹெல உருமய பாரிய தடையை போட்டது. இதனால் உலமா கட்சித்தலைவருக்கும் அன்றைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்குமிடையில் பல சந்திப்புக்கள் நடந்தன. நீண்ட காலம் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாத்தால் இதுவொரு புதிய நியமனமாக ஹெல உறுமயவும் கல்வி அமைச்சரும் நோக்கினர். அவர்களுக்கு இந்நியமனத்தின் வரலாறு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இத்தனைக்கும் உலமா கட்சித்தலைவர் மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான வயதெல்லையை தாண்டியிருந்தும் சமூகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.
அதன் பின் அரசு மீண்டும் மௌனமாகியது. நியமனம் சம்பந்தமாக வர்த்தமாணி அறிவித்தல் வரவில்லை. அதை தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் அரசுடன் முரண்பட்ட உலமா கட்சி அரச ஆதரவிலிருந்து வெளியேறியது.
பின்னர் சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் வந்த போது மீண்டும் உலமா கட்சியின் ஆதரவை அரசு கோரியது. அப்போதும் மௌலவி ஆசிரிய நியமனமே நிபந்தனையாக உலமா கட்சி முன் வைத்தது. அதனை ஏற்ற அரசு வர்த்தமானி அறிவித்தலை 2008 இறுதியில் விடுத்தது. பலரும் போட்டி பரீட்சையில் கலந்து கொண்டும் நியமனம் வழங்கப்படவில்லை.
உலமா கட்சிக்கான ஆதரவை உலமாக்கள் வழங்காததன் காரணமாக உலமா கட்சியின் பலவீனத்தை உணர்ந்த அரசு அந்நியமனம் வழங்குவதை கை விட்டது.
ஆனாலும் உலமா கட்சித்தலைவர் விடவில்லை. முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியின் உதவியை கோரினார். அவரின் உதவியுடன் மீண்டும் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டும் நியமனம் வழங்கப்படாத அநியாயம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இதனை தன் கவனத்துக்கு கொண்டு வந்து நியமனத்தை வழங்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 2010ம் ஆண்டு 150 மௌலவிமாருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும் உலமாக்கள் அதன் பின்னரும் உலமா கட்சியை பலப்படுத்த முன் வரவில்லை.
நியமனம் வழங்கப்பட்ட பின் வந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் உலமாக்கள் உலமா கட்சியின் பலத்தை காட்டுமுகமாக அதனுடன் இணைந்து மஹிந்தவுக்கு ஆதரவளிக்காமல் முஸ்லிம் காங்கிரசின் ஹக்கீமின் பேச்சை கேட்டு சரத் பொன்சேக்காவுக்கு பின்னால் ஓடினர்.
உலமாக்களை நம்ப முடியாது என்பதை உலமா கட்சியும் அரசும் புரிந்து கொண்டது. அதன் எதிரொலி இன்று வரை இந்நியமனம் கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. உலமாக்கள் உலமா கட்சியை பலப்படுத்தினால் நிச்சயம் இதற்காக அரசியல் ரீதியில் போராடி பெற்றுத்தரும் அரசியல் அறிவும் போராட்ட குனமும் உலமா கட்சித்தலைவருக்கு உண்டு.
உலமா கட்சி

Post a Comment