BREAKING NEWS

பாதாளக் குழுவினர் குற்றச் செயல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைப்பு


( மினுவாங்கொடை நிருபர் )

   வத்தளை - ஹேக்கித்த பகுதியில் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவைச்  சேர்ந்த நான்கு உறுப்பினர்களும்,  திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
   இவர்களிடம் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
   பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஹேக்கித்த பகுதியில் நேற்று முன் தினம்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயினுடன் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 17 கிலோ கிராம் ஹெரோயின், ஒரு கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 1.5 கிலோ கிராம் ஹஷீஸ் போதைப் பொருள் ஆகியவற்றுடன் மைக்ரோ ரக துப்பாக்கிகள் இரண்டும் 5  கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
   மேலும், 15 போலி இலக்கத்தகடுகளும் ஒரு தொகை கைவிலங்குகளும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
   கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஜம்பட்டா வீதி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப்  பிரயோகம் தொடர்பில் தேடப்பட்டு வந்த  மலிது என்றழைக்கப்படும் சந்தேக நபரும் உள்ளடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar