முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்! பைசர் முஸ்தபா!
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
தமிழ் மொழி மூலம் ஊடகவியலாளர்களுடன் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் தனிக்கட்சிகள் இருக்கலாம். ஆனால் அவை வடக்கு கிழக்கில் மட்டும் இருப்பதே முஸ்லிம்களுக்கு நல்லது. எங்களது முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெற்ற முஸ்லிம் கட்சிகள் பேரம் பேசுகிறார்கள். அவை எது சம்பந்தமான பேரம் என்பதை மக்கள் அறிவர். இவர்கள் தமக்கான அமைச்சு பதவிகளையே பேரம் பேசுகின்றனர்.
ஒரு ஜனாதிபதி வென்றால் நம்மால்த்தான் அந்த ஜனாதிபதி வென்றார் என முஸ்லிம் கட்சிகள் கூப்பாடு போடுவதால் இவை சிங்கள மக்கள் மத்தியில் துவேஷத்தை ஏற்படுத்தி விட்டன.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று அவரது இல்லத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment