BREAKING NEWS

ஊடகங்களுக்கு படம் காட்டி பணத்தை வீணாக்காதீர்கள்.

பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம்சாட்டியுள்ளார். யோஷித ராஜபக்ஸவை இன்று (27) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஸ, இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தாம் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். " ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்." அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது நான்தான். சிறைக்கு செல்வது எனது தம்பி. நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா. எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியாத்தவுக்குச் சென்றது வீண்தானே. அழைத்திருந்தால் வந்து உங்கள் சாட்சியத்தை அளிப்போம். நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களுக்கு படம் காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள். இந்த வழக்கை, ஊழல் தடுப்புக் குழுவின் செயலாளரான தற்போதைய பொலிஸ் அமைச்சரே தொடங்கினார். அவர் தனது கடந்த கால ஆதாரங்களைப் பயன்படுத்தி, இன்று அதே வழியில் தனது அரசியல் வேட்டையை செயல்படுத்த முயற்சிக்கிறார். அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்கி, தனது சொந்த அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறது. நாங்கள் தெளிவாகத் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். "ஊடகங்களுக்கு படம் காட்டி பணத்தை வீணாக்காதீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar