அம்பாறை மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களின் வீடமைப்புத் திட்ட மீளாய்வுக் கூட்டம்:
Posted by aljazeeralanka.com on June 22, 2026 in | Comments : 0
அம்பாறை மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களின் வீடமைப்புத் திட்ட மீளாய்வுக் கூட்டம்:
பணிகளை துரிதப்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் அறிவுறுத்தல்.
============================
(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டமானது, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மீளாய்வுக் கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் 287 வீடமைப்புச் செயற்திட்டங்களின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சுமார் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத்திட்டங்களின் கீழ் கட்டுமானத்தில் உள்ள அனைத்து வீடுகளும் வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட வேண்டும் என இதன்போது காலக்கெடு விதிக்கப்பட்டது.
எனவே, கட்டுமான வேலைகள் நிறைவடைந்த உடனேயே அதற்கான பணவிடுவிப்புகளை (Payments) எவ்வித தாமதமுமின்றி மேற்கொண்டு, மீள்குடியேற்ற வேலைகளை முழு வீச்சில் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இவ்வுயர்மட்டக் கலந்துரையாடலில் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜெயசுந்தர, அமைச்சின் பணிப்பாளர் (நிறுவனங்கள் மற்றும் மீள்குடியேற்றம்) கே.ஜி.பி. பூர்ணிமா அபேயேசிறி குணவர்தன, மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப் ஆகியோருடன் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment