BREAKING NEWS

ஹிஜாப் விவகாரமும் அடிப்படை உரிமைகளும்

ஹிஜாப் விவகாரமும் அடிப்படை உரிமைகளும்: திருகோணமலை சாஹிரா கல்லூரி விவகாரம் குறித்து சமூக கற்கைகள் மையத்தின் கலந்துரையாடல். கொழும்பு: திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் ஹிஜாப் தொடர்பான பரீட்சைப் பெறுபேறு தாமதிக்கப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு, மனித உரிமைகள், மதச்சுதந்திரம் மற்றும் கல்வியில் சம உரிமை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக கற்கைகள் மையம் (Center for Social Studies – CSS) ஏற்பாட்டில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது, குறித்த கல்லூரியைச் சேர்ந்த சுமார் 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் ஹிஜாப் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC/SUO-MOTU/02/2024) 2026 ஜூன் 26 அன்று வெளியிட்ட தீர்மானத்தின் சட்டப் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சட்ட நிபுணர்கள், இலங்கை அரசியலமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவ உரிமை, மதச்சுதந்திரம் மற்றும் பாகுபாடற்ற அணுகுமுறை ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தினர். அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையின் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், 12(2) ஆம் உறுப்புரையின் கீழ் மதம் உள்ளிட்ட அடையாளங்களின் அடிப்படையிலான பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், 14(1)(e) ஆம் உறுப்புரையின் கீழ் மதத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது எனவும் விளக்கப்பட்டது. மாணவர்களின் மத அடையாளம் அவர்களின் கல்வி உரிமைக்கு தடையாக அமையக் கூடாது என்றும், கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் சமமான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் பரீட்சை அதிகாரிகள் மனித உரிமைகள், மதச்சுதந்திரம் மற்றும் சமத்துவம் தொடர்பான போதுமான அறிவையும் பயிற்சியையும் பெற்றிருக்க வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் வளவாளர்களாக Attorney-at-Law Mahabooba Rifaideen (LL.M) மற்றும் Attorney-at-Law Rudane Zahir ஆகியோர் கலந்து கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், அதன் சட்ட முக்கியத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக விளக்கங்களை வழங்கினர். கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் சட்ட ரீதியான தெளிவான பதில்கள் வழங்கப்பட்டன. சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான அறிவுசார் கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சமூக கற்கைகள் மையம் தெரிவித்துள்ளது. மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதில் இத்தகைய உரையாடல்கள் முக்கிய பங்காற்றும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar