கல்முனை மாநகர சபையில் இன்று மாலை சமர்ப்பிக்கப்படவிருந்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் அசாதாராண சூழ்நிலை தோன்றியது.
மாநகர சபையின் இன்றைய பட்ஜெட் அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேயர் நிஸாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
ஏழு மாநகர சபை உறுப்பினர்களின் எழுத்து மூல கோரிக்கையினை அடுத்தே இன்றைய கூட்டம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
எனினும் சபை மண்டபத்திற்கு பி.ப.2.30 மணியளவில் வருகை தந்த முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட சில மாநகர சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்திற்கு முன்னாள் நின்று கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சிராஸ் மீராசாஹிபினால் மாநகர சபை அறிக்கைகள் கிழித்து வீசப்பட்டதுடன் மேயருக்கு எதிராகவும் கோசம் எழுப்பினார். இதனால் மாநகர சபை வளாகத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
இதன்போது சில உறுப்பினர்களும் பொது மக்களும் சிராஸ் மீராசாஹிபுக்கு எதிராக கண்டன வார்த்தைகளை பிரயோகித்தனர்.
கல்முனை மாநகரத்தை கூறு போடுவதற்கு துணை போக வேண்டாம் எனவும் பிரதேச வாதத்தை தூண்ட வேண்டாம் எனவும் அவர்கள் சிராசுக்கு எதிராக் கோசம் எழுப்பினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசார் விரைந்து வந்து மக்களைக் கலைத்து- சுமூக நிலையை ஏற்படுத்தினர்.
அதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த மேயர் நிஸாம் காரியப்பர்,இன்றைய பட்ஜெட் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுப்பினர்கள் மத்தியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.