அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.
நேற்று (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.
எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார்.