BREAKING NEWS

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மோதல்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் வெடித்துள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மேல் மட்டத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களுடன் கருத்து முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அதிரச் செய்யும் நிலைமைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை பின்னுக்கு தள்ளி விட்டு ராஜபக்ஷ உறவினர்கள் மற்றும் ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவதாக கூறி வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஆளும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களின் அதிருப்தி கட்சிக்குள் பெரும் மோதல் நிலைமையை தோற்றுவித்துள்ளது.
இவர் மகிந்தவின் ஆள், அவர் பசிலின் ஆள், அந்த நபர் ஷமலின் ஆள், இவர் கோத்தபாயவின் ஆள் எனக் கூறிக்கொள்ளும் அளவுக்கு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
பிரதேச சபைகளில் ஏற்பட்டுள்ள தொடர் வரவு செலவுத் திட்டங்களின் தோல்விக்கும் இதுவே காரணம் என அவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்விடையந்தமை தொடர்பில் முக்கியமாக அமைச்சர்கள் எஸ்.எம். சந்திரசேன, பந்துல குணவர்தன, சாந்த பண்டார, மேர்வின் சில்வா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்பிலும் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து கீதா குமாரசிங்கவை நீக்க வேண்டும் எனக் கோரி தென் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar