இலங்கையின் சுதந்திர தினத்தன்று முஸ்லிம்கள் தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென்று தேசி சூரா சபை அறிக்கை விட்டிருப்பது இலங்கை முஸ்லிம்களை கேவலப்படுத்துவதாக முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. .
இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரச ஆதரவு அரசியல்வாதிகளாலும் அரச ஆதரவு அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சூரா சபை என்பது எடுத்த எடுப்பிலேயே இலங்கை முஸ்லிம்களை
அவமானப்படுத்தியுள்ளது. இவ்வாறான அறிக்கை மூலம் இலங்கை முஸ்லிம்கள் தேசப்பற்றற்றவர்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டு முஸ்லிம்கள் இலங்கையின் சுதந்திர தினத்துக்காக பெரிதும் பாடு பட்டவர்கள். ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் தமது சுயத்தை தற்காத்துக்கொண்டு வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அதே போன்று தேசிய கொடியில் சிங்கத்தின் உருவம் இருந்த போதும் அதனை தமது பாடசாலைகள் நிறுவனங்களில் ஏற்றி வருகிறார்கள். யதார்த்தம் புரியாத சில உலமாக்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை எற்றுவதை கொச்சைப்படுத்தி வந்ததால் சிலர் தேசியக் கொடி பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
இதனை மாற்றி சுதந்திரத்தில் நமக்கும் பங்குண்டு என்பதை வெறுமனே சொல்லிக்கொண்டிராமல் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உலமாக்களின் அமைப்பான உலமா கட்சியால் 2006ம் ஆண்டு கொழும்பில் சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. உலமாக்கள் அமைப்பால் நடத்தப்பட்ட முதலாவது சுதந்திர தின விழாவாக இது அமைந்தது.
இவ்வாறு முஸ்லிம்கள் சுதந்திர தினத்துக்கு மதிப்பளித்தும் பேரினவாதம் முஸ்லிம்களை அவமானப்படுத்தியதை அண்மைக்காலத்தில் கண்டோம். இதன் பின்னணியில் அரசம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இந்த நிலையில் இந்த சுதந்திர தினத்திலாவது அனைத்து சமய மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கோருவதே முஸ்லிம் இயக்கங்களின் கடமையே தவிர ஏதோ சுதந்திர கொடியை முஸ்லிம்கள் ஏற்றத்தெரியாத அல்லது ஏற்ற விரும்பாத தேசப்பற்றற்றவர்கள் என இந்த சூரா சபை காட்டிக்கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தேசிய கொடியை பறக்க விடுவதால் மட்டும் நாட்டின் தேசப்பற்றை அiயாளம் காட்ட முடியாது. மாறாக இலங்கையர் அனைவருக்கும் அனைத்து மதங்களுக்கும் சமவுரிமையை வழங்குவதால் மட்டுமே தேசப்பற்றை உலகறியச்செய்ய முடியும் என்பதை இத்தகையவர்களுக்கு சொல்லி வைக்கின்றோம்.
