BREAKING NEWS

கிழக்கில் அரசுக்கு ஆதரவை விலக்கு முன் ஹக்கீம் தனது அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும்

முஸ்லிம் சமூகத்தை தமது பதவிகளுக்காக தொடர்ந்தும் காட்டிக்கொடுக்கம் முஸ்லிம் காங்கிரசைச்சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் தாம் பதவிக்காக அமைச்சர் பைசர் முஸ்தபா போன்று சமூகத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறுவது மக்களை இவர்கள் இன்னமும் மடையர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதானாலாகும்  என
முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா) கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஜமீலின் மேற்படி அறிக்கை சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது, கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது அரசு  பள்ளிகளை உடைக்கிறது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களின் வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை கூட தருகிறோம் என கூறிய போதும் மத்தியில் தமது தலைவரின் அமைச்சு பதவியை காப்பாற்றுவதற்காக ஜமீலின் தலைமையில் கிழக்கு முஸ்லிம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டதை மறந்து விட்டாரா?
அதே போல் திவிநெகும சட்டமூலத்துக்கு நாம் ஆதரவளிக்க மாட்டோம் என ஹக்கீம் கூறி விட்டு வெளிநாடு போக அவரை தொடர்பு கொள்ள முடியாததால் நாம் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் என இந்த நவீன தொடர்புச்சாதன உலகில் சிறு பிள்ளைத்தனமாக ஜமீல் அறிக்கைவிட்டு முஸ்லிம் சமூகத்தை அப்பட்டமாக காட்டிக்கொடுத்து விட்டு இப்போது கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பதவிகளுக்காக சமூகத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம் என பொய் கூறுகிறார்.
நவநீதன் பிள்ளையிடம் அறிக்கையை சமர்ப்பிக்கப்போவதாக உலமா கட்சியும், நல்லாட்சி இயக்கமுமே பகிரங்கமாக அறிவித்ததுடன் செயற்பாட்டிலும் இறங்கினர். இதனைக்கண்ட பின்தான் முஸ்லிம் காங்கிரஸ்; அறிக்கையை கையளித்தனர். அதைக்கூட தான் கொடுக்கவில்லை ஹசனலியே கொடுத்தார் என அவரைக்காட்டிக்கொடுத்த ஒருவரைத்தான் இவர்களும் தலைவராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கூட முஸ்லிம் காங்கிரஸ்தான் அறிக்கையை கொடுத்தது என ஐ நா அறிவிக்கவில்லை. அவ்வாறு உண்மையில் சர்வதேச விசாரணை கோரி மு. கா அறிக்கை கையளித்திருந்தால் சர்வதேச விசாரணை தேவையில்லை என ஹக்கீமும், பசீர் சேகுதாவூதும் சொல்வது ஏன்?
அதே போல் சிறுபான்மை மக்களுக்கு நன்மை தரும் ஜெனீவா பிரேரணையை எதிர்த்தும்  பள்ளிவாயல்களை உடைக்கும் அரசாங்கத்தை ஆதரித்தும் கல்முனையில் முஸ்லிம் காங்கிரசினால் ஏற்படுத்தப்பட்ட பேரணி முஸ்லிம் சமூகத்தை மொத்தமாக காட்டிக்கொடுக்கவில்லையா என கேட்கிறோம். நவிப்பிள்ளையிடம் அறிக்கை கொடுத்து விட்டு பிச்சைவேணாம் நாயைப்பிடி என்பது போல் அரசுக்கு நல்ல பிள்ளையாக நடிப்பது காட்டிக்கொடுப்பு இல்லையா என ஜமீலிடம் கேட்கிறோம்.
ஆக மொத்தத்தில் பதவி வெறி பிடித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கான ஆதரவை விலக்காது என்பதை நாம் உறுதியாக கூறுவதுடன் ஆதரவை விலக்கும்படி ஹக்கீம் கூறினாலும் இவர்கள் ஒட்டிக்கொள்வார்கள் என்பதை இக்கட்சியின் உறுப்பினர்கள் ஏலவே பாராளுமன்றத்தில் நிரூபித்துள்ளனர். அத்துடன் கிழக்கில் அரசுக்கு ஆதரவை விலக்கு முன் ஹக்கீம் தனது அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும். இத்தனை பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட பின்பும் இதனை செய்யாதவர் இதன் பின்பா செய்யப்போகிறார்?

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar