ஏனைய பிரச்சினைகளை வெற்றிகரமாக முகம் கொடுத்தது போன்று ஜெனீவா பிரச்சினையையும் ஜனாதிபதி சர்வதேச அணுகுமுறை மூலம் தீர்வு காண்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜெனீவா மாநாடு குறித்து வினவப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், பொருளாதாரப் பிரச்சினையையோ யுத்தத்தையோ காட்டி வாக்கு பெற முடியாததால் ஜெனீவா மாநாட்டை காட்டி வாக்கு பெற ஐ.தே.க. முயல்கிறது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்கும். இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டால். தேவையான நடடிக்கைகளை முன்னெடுக்க அவகாசம் ஏற்படும்.
ஜெனீவா மாநாட்டுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் நான் உட்பட 6 அமைச்சர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளோம். இதன் சட்டப் பின்னணியை ஆராயவும் இதற்கான நிபுணர் குழுவொன்றை நியமிக்கவும் அதில் கோரியுள்ளோம். இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை. எமது தரப்பு அபிப்பிராயத்தையே முன்வைத்துள்ளோம்.
எமக்கு பொருளா¡ரத் தடை விதிப்பதானால் பாதுகாப்பு சபையிலே அது குறித்து முடிவு எட்டப்பட வேண்டும். அங்கு சீனா, ரஷ்யா, ஆகிய நாடுகள் எச்சந்தர்ப்பத்திலும் இதற்கு இடமளிக்காது. மனித உரிமைப் பேரவையினூடாக இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதிக்க இயலாது. இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கைப்படி தமது முடிவை எடுக்கும். ஜனாதிபதி இந்திய பிரதமரைச் சந்தித்துள்ளார்.
எமக்கு இந்த சர்வதேச ரீதியான பிரச்சினையைத் தீர்த்தால் நாட்டில் வேறு பிரச்சினை எதுவும் இருக்காது. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முன் கூட்டியே தெரியும். அதனால் விழித்திருந்து முடிவுகளை அறிய வேண்டிய தேவை இருக்காது. ஜே. வி. பி. தலைமை மாறினாலும் ஐ. தே. க. தலைவர் இறுதி வரை அந்தப் பதவியில் இருப்பார். அவரும் கட்சி பெயர் பலகையும் மட்டும்தான் இறுதியில் எஞ்சும்.