(அஸ்லம் எஸ்.மௌலானா)
பொதுபல சேனாவை அரசாங்கம் தான் போசிக்கிறது என்றால் முஸ்லிம் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வில் சமர்பிக்கப்பட்ட பொதுபல சேனாவை தடை செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“பொதுபல சேனாவை பூண்டோடு அழிக்கும் காலம் நெருங்கி விட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி விட்டார். பொது பல சேனாவின் எமது கட்சியும் அரசாங்கமும் வன்மையாகக் கண்டிக்கின்றன. இந்த தீவிரவாத இயக்கத்தை அரசாங்கம் ஒருபோதும் ஆதரிக்கவுமில்லை. போசிக்க்கவுமில்லை.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸினர் அரசுடன் ஒட்டிக் கொண் டிருந்து கொண்டு பொது பல சேனாவுக்கு அரசு துணை போவதாகக் கூறுவது வேடிக்கையானது. நீங்கள் அரசாங்கத்தையும் நாட்டையும் காடிக் கொடுக்கிறீர்கள்.
இந்த பொது பல சேனா தொடர்பான பெரியதொரு விடயத்தை இந்த சபைக்குள் மட்டும் பேசிப் பயனில்லை. இதனை பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டியவர்கள் சலுகைகளுக்காகவும் சுகபோகங்களுக்காவும் அரசுடன் ஒட்டிக் கொண்டு மௌனம் காக்கின்றனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லோரும் இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனக் குரல் எழுந்தது. முடிந்தால் வக்கில்லாத இவர்கள் முதலில் அதனை செய்து காட்டட்டும்.
பொது பல சேனாவின் அட் ட காசங்கள் அழிக்கப்படும். முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஜனாதிபதியின் செயற்பாட்டினால் அதற்கான காலம் கனிந்துள்ளது.
சுயநல அரசியலுக்காக நாட்டுக்கும் தேசிய ஐக்கியத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் எவரும் பேச முற்படக் கூடாது. சமூகத்திற்காக பேடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு எவரும் துவேசம் பேச முற்படக் கூடாது” என்று குறிப்பிட்டார்.