BREAKING NEWS

தம்புள்ள பள்ளி விடயத்தில் மாற்றுக்காணி பெற்று பள்ளிவாயலை அகற்றுவது மேலும் பல பள்ளிவாயல்கள் அகற்றப்படுவதற்குரிய மோசமான உதாரணமாக கொள்ளப்படும்- உலமா கட்சித்தலைவர்

தம்புள்ள பள்ளி விடயத்தில் மாற்றுக்காணி பெற்று பள்ளிவாயலை அகற்றுவது மேலும் பல பள்ளிவாயல்கள் அகற்றப்படுவதற்குரிய மோசமான உதாரணமாக கொள்ளப்படும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக உலமா கட்சியினால் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

தம்புள்ள பள்ளிவாயலை அகற்றுவதற்கு பாரிய பல சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்குத்துணையாக சில முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் கட்சிகளும், ஒரு மௌலவியும் செயற்படுகின்றனர். தம்புள்ள விடயத்தில் பள்ளியை உடைப்பதில்லை என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியாத கையறு நிலையில் உள்ள முஸ்லிம் காங்கிரசும் அ.இ. மக்கள் காங்கிரசும் சமூகத்துக்கு எதைஎதையோ சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. தம்புள்ளயில் என்ன நடக்கின்றது என தனக்குத்தெரியவில்லை எனரஊப் ஹக்கீம் சின்னப்பிள்ளை போல் கூறிக்கொண்டிருக்கின்றார். அவர் எந்த நாட்டின் அமைச்சர் என்றாவது அவருக்குத்தெரியுமோ தெரியவில்லை.

பள்ளிக்கு எதுவும் நடக்காது என கூறிக்கொண்டே இத்தகைய அரசுக்கு ஜால்ரா அடிக்கும் சுயநல கூட்டங்களை வைத்து பள்ளி நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்து பள்ளியை அகற்ற முனைகிறார்கள். அபிவிருத்திக்கு ஒத்துழைத்தல், சிங்கள முஸ்லிம் உறவு என மக்களை ஏமாற்றுகிறார்கள். மிக இறுக்கமாக இருந்த சிங்கள முஸ்லிம் உறவை சிதைத்து விட்டு இப்போது வேதாந்தம் பேசுகிறார்கள். மாற்றுக்காணி பெற்று பள்ளியை அகற்றுவதை ஏற்றுக்கொண்டால் நாளை இதையே உதாரணமாக வைத்து கொழும்பு சம்மாங்கோட்டு பள்ளி, கண்டி, அம்பாரை என பல பள்ளிவாயல்களை அகற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படும். அப்போது தம்புள்ள பள்ளிவாயல் உதாரணமாக காட்டப்பட்டு அதற்கு மாற்றிடம் வழங்கியது போல் இவற்றுக்கும் தருகிறோம் என்பார்கள். அப்போது இந்த சிங்கள முஸ்லிம் உறவுக்கு என்ன நடக்கும்?
சிங்கள முஸ்லிம் உறவு என்பது பன்சலையும் பள்ளியும் இரு இனங்களும் வாழும் ஒரு ஊரில் இருப்பதை அனுமதிப்பதன் மூலம் கட்டியெழுப்பப்படுமே தவிர பள்ளியை அகற்றுவதற்கு இடமளிப்பதன் மூலம் முடியாது என்பதை உறுதியாக சொல்கிறோம்.  இந்த சாட்டை சொல்லித்தான் உலமா சபையும் ஹலாலை விட்டுக்கொடுத்து அவமானத்தை சந்தித்தது. கடைசியில் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

எம்மை பொறுத்தவரை தம்புள்ள பள்ளி நிர்வாகத்தினர் மாற்றுக்காணி பெற்று பள்ளிவாயலை அகற்ற இடமளிக்கக்கூடாது. பள்ளிவாயல் இறையில்லமாதகும். அதனை உடைக்கத்தான் வேண்டுமென்றால் அவர்கள் உடைக்கட்டும். அரசிடம் மாற்றுக்காணி பெறாமல் தம்புள்ள முஸ்லிம்கள் சொந்த பணத்தின் மூலம் வேறு பள்ளி கட்ட வேண்டுமே தவிர அப்பள்ளி தம்புள்ள நூரியா பள்ளியின் இடமாற்றமாக அமையக்கூடாது. இப்போதிருக்கும் ;பள்ளி உடைக்கப்பட்டால் அதற்கெதிராக பள்ளிவாயல் நிர்வாகம் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டுமே தவிர பள்ளிவாயலிலிரு;;து ஒரு துரும்பையேனும் முஸ்லிம்கள் இடம் மாற்ற  இடமளிக்கக்கூடாது.

தம்புள்ள பள்ளிவாயல் அரசாலோ அல்லது அரசின் ஒத்துழைப்பாலோ உடைக்கப்பட்டால் அது இந்த அரசாங்கத்துக்கும் ஹக்கீம், ரிசாத், அதாவுள்ளா, பௌசி  போன்ற சமூகத்தை காட்டிக்கொடுத்தவர்களுக்கும் வரலாற்றுக்கறையாக இருக்கும் என்பதுடன் முஸ்லிம்களுக்கெதிரான செயல் இது என்பதை முழு வரலாறும் சொல்லும். அத்தகைய பழிச்சொல்லுக்கு அரசு தயாராகாது என்றே நினைக்கிறோம்.  ஆகவே பள்ளிக்கு மாற்றுக்காணி என்ற பசப்பு வார்த்தைகளுக்கு நிர்வாகம் அடிபணியக்கூடாது என்பதுடன் உடைப்பதாயின் அரசாங்கமே உடைத்து விட்டுப்போகட்டும் என்றே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னுமொரு பள்ளிவாலை அகற்ற முயற்சித்தாலும்; பள்ளியை உடைத்தாலும் முஸ்லிம்கள் அதனை இடம் மாற்ற அனுமதிக்கமாட்டார்கள் என்ற செய்தியை பேரினவாதத்துக்கு சொன்னதாக முடியும் என்பதே உலமா கட்சியின் கருத்தாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar