“
(செயிட் ஆஷிப், எம்.பைசால் இஸ்மாயில்)
லக்ஸ்டோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழா இன்று சனிக்கிழமை மாலை கல்முனை சாஹிராக் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் ஊடகப் பங்களிப்புக்கான கௌரவிப்பு வைபவம், “மனிதம்” குறுந்திரைப்பட இறுவெட்டு வெளியீடு, “இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்” நூல் அறிமுக நிகழ்வு என்பன இடம்பெற்றன.
லக்ஸ்டோ தலைவர் கவிஞர் மருதூர் அன்சாரின் நெறிப்படுத்தலில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி எழுதிய “இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்” நூலின் முதல் பிரதியை உதவிக் கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.நதீர் மௌலவி பெற்றுக் கொண்டார்.
அத்துடன் ஆசியா பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியும் மெட்ரோ மிரர் இணையத்தள பணிப்பாளரும் தேசிய முஸ்லிம் கவுன்சில் தலைவருமான எம்.ஐ.எம்.வலீத், தேசிய முஸ்லிம் கவுன்சில் செயலாளர் நாயகமும் ஊடகவியலாளருமான அஸ்லம் எஸ்.மௌலானா, றினோன் கழக தலைவர் எம்.எம்.நிஹார், வர்த்தகப் பிரமுகர் எம்.எம்.ஜௌபர் உட்பட மற்றும் பலரும் சிறப்புப் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
அதேபோன்று கவிஞர் மருதூர் அன்சாரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள “மனிதம்” குறுந்திரைப்பட இறுவெட்டின் முதல் பிரதியை டாக்டர் எஸ்.நஜிமுதீன் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்ட உணவு, மருந்து சிரேஷ்ட பரிசோதகர் எம்.எம்.தஸ்தகீர், தொழிலதிபர் எஸ்.எம்.ஜிப்ரி உட்பட பல பிரமுகர்கள் அதன் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், ஊடகவியலாளர் அஸ்லம் எஸ்.மௌலானா, மருத்துவ கண்டுபிடிப்பாளர் சக்கி லத்தீப் உட்பட பத்துப் பிரமுகர்கள் கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் ஊடகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகள், ஒலிபரப்பாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
Thanks: Metromirror.lk