BREAKING NEWS

முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்:முஜிபுர் ரஹ்மான்

ஊவா மகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் களமிறக்கப்படாத நிலையில் சில முஸ்லிம் தலைமைகள் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 
வெலிமடை - சில்மியாபுரத்தில் ஐ.தே.க ஊவா மாகாண சபை வேட்பாளர்களான அமீர் மொஹமட் மற்றும் ரவி சமரவீர ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
 
ஊவா மாகாண சபை தேர்தல் முக்கியமானதோர் தேர்தலாகும். ஏனெனில் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை இத்தேர்தலே தீர்மானிக்கவுள்ளது.
 
நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பல அசெளகரியங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு சிங்கள மக்கள் கூட இந்த அரசாங்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமலுள்ளது. இந்த அளவிற்கு அத்தியாவசிய பொருட்களினது விலையும் சேவைகளினது கட்டணங்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.
 
அதேவேளை, முஸ்லிம்கள் நீண்ட காலமாக ஐ.தே.கட்சியையே ஆதரித்து வந்துள்ளனர். தொடர்ந்து ஐ.தே.க. விற்கு செல்லும் வாக்கினை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்றும் அதற்கான சதித்திட்டமொன்று தீட்டப்படுகின்றது.
 
அரசாங்கத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படாது தேசிய ஐக்கிய முன்னணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்தின் பிற்போக்கு தனத்தையும் முஸ்லிம் கட்சிகளின் காட்டி கொடுப்பையுமே வெளிப்படுத்துகின்றது என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar