BREAKING NEWS

முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி பேச வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவை நாடியமையை உலமா கட்சி வரவேற்பதுடன் இலங்கையில் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி பேச முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரியுள்ளார். இது பற்றி அவர்; தெரிவித்ததாவது,


இலங்கையின் அண்டை நாடான இந்தியாவை பகைத்துக்கொண்டு அல்லது அந்நாட்டை நிராகரித்து இலங்கையில் எத்தகைய தீர்வும் ஏற்படாது என்பதே யதார்த்தமாகும். இதனை உணராமை காரணமாகவே விடுதலைப்புலிகள் பாரிய தோல்வியை சந்தித்தனர். அதே போல் 1987ம் ஆண்டு இந்திய தலையீட்டினை அடுத்தே இலங்கையில் மாகாண சபை தீர்வு வந்தது.

ஆக இந்தியாவை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்ட தமிழ்க்கூட்டமைப்பு இந்தியா சென்று இந்திய பிரதமரை சந்தித்தமை தமிழ் கூட்டமைப்பின் அரசியல் வியூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தப்பயணத்தின் போது அரசில் அங்கம் வகிக்காத முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச்சென்றிருந்தால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நல்லதோர் புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பது எமது கருத்தாகும். ஆனாலும் தமிழ் கூட்டமைப்பின் இந்திய பயணம் இனவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. வெளி நாடுகளை நம்பாமல் உள்நாட்டிலேயே தீர்வு காணலாம் என்ற கூற்றை நம்ப முடியாது. அதனை நம்பக்கூடிய எந்தவொரு சமிக்ஞையையும் அரச தரப்பில் காண முடியவில்லை. உள்நாட்டு அரசு தானாக தீர்வு கொண்டு வராது என்பது 1987ம் ஆண்டே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது முத்தரப்பாக உள்ள போதும் முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருப்பதால் பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பாக மாறியுள்ளது. முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் அமைச்சுக்களை பெற்று சுக போகத்தில் மூழ்கியுள்ளதால் முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் யாரை ஏமாற்றி எதனைப்பெற்று தமது சுயநலன் காக்கலாம் என்றே திரிவதை காண்கிறோம்.   இவ்வாறு இனப்பிரச்சினை சம்பந்தமாக தூங்கிக்கொண்டிருந்து விட்டு பின்னர் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததும் அதன் பின் முத்தரப்பு பேச்சுவார்த்தை வேண்டும் என இவர்கள் ஒப்பாரியிட்டு முஸ்லிம்களை ஏமாற்ற முனைவார்கள்.

ஆகவே பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட வேண்டும். மாறாக அனைத்தும் முடிந்த பின் கைசேதப்படுவதை விடுத்து இப்போதே இதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட வேண்டும். இந்திய பிரதமருக்கு இலங்கை முஸ்லிம்களின் இனப்பிரச்சினையை விளக்குவதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வழி சமைக்கப்படலாம் என உலமா கட்சி நம்புகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar