இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த அதிமுக்கிய பிரமுகர்கள் இருவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக இலங்கையில் பல்வேறு மட்டங்களிலும் சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு பங்களிப்பு செய்து வருகின்ற சவூதி அரேபிய அல்-கஷீம் பல்கலைக்கழக பேராசிரியர் சாலிஹ் ஹத்லூல் மற்றும் சவூதி அரேபிய மனித வள அபிவிருத்தி தாபனத்தின் கிழக்காசியாவுக்கான பிரதிநிதி ஷேக் ஹாலித் ஹைரூத் ஆகியோரே இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் இன்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் இலங்கை வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் அவர்களது தேவைகள் குறித்தும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
இதில் அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் ஏ.எஸ்.எம்.அஸீஸ், சட்டத்தரணி அன்ஸார் மௌலானா, சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, டாக்டர் அல்-அமீன் றிசாத், மௌலவி நாஸிர் கனி உட்பட பலரும் கருத்துக்களை முன்வைத்ததோடு சவூதி அரேபிய பிரமுகர்களிடம் கேள்விகளைத் தொடுத்து தெளிவுகளைப் பெற்றுக் கொண்டதுடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த இப்பிரமுகர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Post a Comment