மு.கா தனது பேரம் பேசல் சக்தியால் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன?
-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
அரசிற்கும் மு.கா இற்குமிடையிலான உறவு பல ஆண்டு காலமாக விரிசலுடன் இருப்பதை யாவரும் அறிவர். எனினும் மு.கா இன் தேவை அரசுக்கு இருப்பதால் அரசு மு.காங்கிரசை மெல்லவும் இயலாது, துப்பவும் இயலாத ஓர் இக்கட்டான சூழ் நிலையில் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறது.
அரசுக்கு முட்டு கொடுத்து வரும் காலப்பகுதியில் மு.கா இரு சந்தர்ப்பங்களில் மிகப் பெரிய பேரம் பேசுதல் சக்தியை பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாண ஆட்சி
18 ம் சீர் திருத்த சட்டம்
இவ் இரண்டிலும் அரசிற்கு மு.கா ஆதரவு வழங்கி இருக்கா விட்டால் அரசால் இவற்றை சாதித்திருக்க இயலாது. அரசு இவற்றை தவற விட்டிருப்பின் பாரிய இராஜ தந்திர பொறிக்குள் அகப்பட்டிருக்கும். இவ் இரு சந்தர்ப்பங்களிலும் மு.கா கேட்பதை அரசு தனக்கு இயலுமானவரை கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.
இவற்றை வைத்து மு.கா இதுவரை சாதித்தது தான் என்ன??
இதன் போது சாதிக்க முடியாதவற்றை எதில் சாதிக்கப்போகிறது??
இப்படியான அரிய சந்தர்ப்பங்கள் இனிமேல் எப்போது கிடைக்கப்போகிறது?
இவ்வாறான அரிய சந்தர்ப்பங்களை எவ்வாறு மீண்டும் உங்களை நம்பி தருவது??
13 ம் சீர் திருத்த விடயத்தில் மாத்திரமே அரசை கிழக்கு மாகாண சபையில் மு.கா எதிர்த்தே தவிர மற்றைய இலங்கை அரசியல் அனைத்திலும் மு.கா அரசுக்கு சார்புப் போக்கையே கடைப்பிடித்தது.சென்ற முறைக்கு முதன் முறை ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கைக்கைக்கு சார்பாக திரட்டவும் உதவி இருந்தது. இவ்வாறு அரசு பலவற்றில் மு.காங்கிரசை வைத்து தனது காய் நகர்த்தல்களை கற்சிதமாய் மேற்கொண்டு வருகிறது.
“நாய் வேடம் பூண்டால் குரைத்தாக வேண்டும்” என்ற பழ மொழிக்கு ஒப்ப அரசுடன் இணைந்திருக்கும் காலமெல்லாம் அரசிற்கு வால் ஆட்டுவதை பிழை என இயலாது.
எனினும் இவற்றையெல்லாம் வைத்து மு.கா மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது தான் என்ன..?? என்ற வினாவிற்கு இது வரை பதில் இல்லை என்பதே!உண்மை.
அரசுடன் மு.கா சார்புப் போக்கைக் கடைப்பிடிப்பது முஸ்லிம்களின் தேவைகள், உரிமைகள், சலுகைகளை அடைந்து கொள்ளவே!
இவை எவையும் அரசுடன் இருப்பதால் கிடைக்காது என்றால் அரசுடன் இருந்து கொண்டு அரசு மு.காங்கிரசை வைத்து நகர்த்திய, நகர்த்தும் காய் நகர்த்தல்களில் இருந்து விடுபட்டு முரண்பாட்டு அரசியல் மூலம் எமக்கு தேவையானவற்றை அடைந்து கொள்ள எத்தனிப்பதே!அறிவுடமையாக இருக்கும்.
மு.கா அரசுடன் இருந்து கொண்டு எதுவும் செய்வதும் இல்லை, விலகுவதும் இல்லை என்ற பாணியில் தனது பயணத்தை தொடர்வது சமூகத்திற்கு எது வித பயனையும் விளைவாக்கப்போவதில்லை..
மு.கா அது செய்திருக்கிறது, இது செய்திருக்கிறது என சிலர் மிகச் சிரமப்பட்டு சில சிறிய ஆதாரங்களுடன் வரிந்து கட்டிக் கொண்டு வரலாம். இங்கே,மு.கா செய்திருக்கலாம், செய்ய வேண்டும் என குறிப்பிடுவது கரையோர மாவட்டம் போன்ற மிகப் பெரிய இலட்சியங்களை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் இயலாதவர்களிடமும் கேட்கவில்லை. சரியான பேரம் பேசல் சக்தியை வழங்கித் தானே கேட்கிறார்கள்??
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பது போன்ற ஒரு உறுதியான கொள்கை, இலட்சியம் மு.கா இடம் இல்லாமையே பிரதான காரணம் எனலாம். மேலும், தலைமைத் துவத்தின் மீதான சவால், அரசுக்கு கூஜா தூக்கி சில சுய நல அங்கத்தவர்களை மு.கா கொண்டிருக்கின்றமை, மு.கா அங்கதவர்களிடையான பதவி மோகம் என காரணங்களை அடிக்கிக் கொண்டே செல்லாம்.
எதிர் காலத்திலாவது மு.கா இவற்றையெல்லாம் சாதித்து மக்களிடையே வீர நடை போட இவ்வாறான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கண்டு உறுதியான கொள்கைகளோடு பயணிக்க வேண்டும்.
Post a Comment