மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்கமுடித்திருக்கும் நிலையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்லோவேனியா குடியரசின் பிளெட் நகரில் நடைபெற்ற பிளெட் மூலோபாய பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் மத்திய கிழக்கு மற்றும் பல்கான் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தால் அமைச்சர் பீரிஷ¥க்கு விருதொன்றும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. ஸ்லோவேனியா பாராளுமன்றத்தின் சபாநாயகர், அமைச்சர்கள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
எந்தவொரு வன்முறைகளும் இல்லாத அளவில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டி இலங்கை பாரியதொரு வெற்றியைப் படைத்துள்ளது.
இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் சார்பில் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன். நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் ஒரு வன்முறைகூட இடம்பெறவில்லை.
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமன்றி இதுவரை எந்தவொரு வன்முறையும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவில்லையென்பது பாரியதொரு அடைவாகும்.
உலகளாவிய ரீதியில் நாடு பெற்றிருக்கும் பல்வேறு அடைவுகள் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன்னேறும் அதேநேரம், அரசியல் ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படு த்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டியுள்ளது என்றும் தெரி வித்தார்.
வறுமை ஒழிப்பு, கல்வி, தொழில்நுட்ப அறிவு, சிறுவர் மற்றும் பெண்களின் நலன்புரி ஆகிய விடயங்களில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் தனது உரையில் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் அப்பால் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
நாடுகளுக்கிடையில் நடைபெறும் சட்டவிரோத ஆள் மற்றும் பொருட் கடத்தல்களை தடுப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
Post a Comment