BREAKING NEWS

மூன்றாவது தடவையும் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதி



சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே எமது ஜனாதிபதி யவர்கள் 30 வருட காலமாக நாட்டை ஆட்டிப் படைத்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மூன்றாம் தரமும் தேர்தலில் போட்டியிடும் போது அவர் வெற்றி பெறுவது உறுதியென்பதனை அறிந்து வைத்துள்ள எதிர்க்கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

மத்தளவில் ‘பெஸ்ட் லைப்’ நிறுவனத்தினால் ‘பெஸ்ட் லைப் எக்கோ ரிகோர்ட்’ என்னும் பதனம விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜே.வி.பி யினர் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு மூன்றாம் தரமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை பிரசாரம் செய்யும் வகையில் எல்லா இடமும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
உண்மையில் இவர்கள் ‘மஹிந்தட்ட பே’ என்பதற்கு பதிலாக ‘மஹிந்தட்ட பய’ என்றே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். ஜனாதிபதியின் வெற்றி மீதுள்ள பயத்தினாலேயே இவ்வாறான பிரசாரங்களை அவர்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக்க லக்கும்பர, பெஸ்ட் நிறுவனத் தலைவர் தமித் உப்பாளி பெர்ணான்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது அதிகாரத்தையும் பண பலத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கியதே இந்த மூன்றாம் உலக நாடுகளாகுமே தவிர உண்மையில் அவ்வாறானதொரு நாடுகள் இல்லையெனவும் தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை கட்டுப்படுத்தும் உபாய மார்க்கமாகவே இந்த மூன்றாம் உலக நாடுகளை கையாள்கின்றன எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் 1975இல் அணிசேரா நாடுகளின் மாநாடு நடந்தபோது அப்போதைய பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளுக்கான வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்காக கோரிக்கையொன்றை முன்வைத்தார். எனினும் அந்த கோரிக்கை அணிசேரா நாடுகளின் அமைப்பிலிருந்த பலம் பொருந்திய நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.
அன்று இலங்கை பிரதமரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அணிசேரா நாடுகளின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கென பலம் பொருந்திய வங்கியொன்று உருவாக்கப்பட்டி ருக்கும். உலக வங்கி, ஐ.எம்.எப். ஆகியன தோற்றம் பெற்றிருக்காது. தமது பணபலத்தை கொண்டு ஏனைய நாடுகள் மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நாடுகள் அன்று அந்த வங்கியை நிலைநிறுத்துவதற்காக கோரிக்கையை நிராகரித்திருந்தன எனவும் அமைச்சர் கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar