BREAKING NEWS

ஜனாதிபதித் தேர்தலில் எவரும் போட்டியிடாது, மஹிந்தவை ஜனாதிபதியாக தெரிவு செய்யனும் - அப்துல் காதர்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவரும் போட்டியிடாது கட்சி, இன, மத பேதம் பராது சகலரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் போன்று எந்தவொரு தலைவரும் இந்நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டுக்கு ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றிக்கடனாக எவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது இந்நாட்டில் மூன்று தசாப்தகாலம் நீடித்த அச்சம் பீதியை எமது ஜனாதிபதியே முடிவுக்குக் கொண்டு வந்தார். அதன் பயனாக முழு நாட்டு மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.

இதேநேரம் இந்நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதையில் அவர் இட்டுசென்றுள்ளார். முழு நாட்டிலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு இருக்கின்றது. அவற்றின் பலன்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இப்போது நாட்டிலும் மக்கள் வாழ்விலும் சுபீட்சமும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான அபிவிருத்தியை முன்னொரு போதுமே இந்நாடு பெறவில்லை. அதேநேரம் சீனா, இந்தியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகின் பல நாடுகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அதிக நம்பிக்கை வைத்துள்ளன. ஜனாதிபதி அவர்கள் மத்திய கிழக்கின் நண்பனாக விளங்கு கிறார்.

இவ்வாறான நிலையில் இந்நாட்டின் சுபீட்சம் மற்றும் விமோசனம் குறித்து பொறாமை கொண்டுள்ள ஐரோப்பா எல்.ரி.ரி.ஈ. மீதான தடையை இப்போது நீக்கியுள்ளது. இதனூடாக மீண்டும் நாட்டை சீர்குலைக்க அவர்கள் முயற்சி செய்வதாகவே நோக்க வேண்டியுள்ளது.

ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரும் போட்டியிடாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அதுவே நன்றியுள்ள ஒவ்வொரு இலங்கையனதும் பொறுப்பு என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar