* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு
‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க, நிதி மோசடிப் பிரிவுக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திவிநெகும திணைக்களத்தின் பணிக்கொடை கொடுப்பனவு மோசடி மற்றும் திவிநெகும திட்டத்தின் கீழ் நிவாரண வீட்டுத் திட்ட நிதி மோசடி அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாடொன்றுக்காக சுமார் 73 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளமை தொடர்பாக வும் தனித்தனியே 15 பேர் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு விடயங்களை ஆற்றுப்படுத்தி சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும் அதற்கான வேலைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு அம்பாறையிலிருந்து மூன்று பேரை அழைத்து வருவதற்கு மூன்று லட்சம் ரூபாவை திவிநெகும திணைக்க ளம் செலவு செய்துள்ளது என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தாக குறிப்பிட்டார்.
இதே வேளை திவிநெகும திட்டத்தை கிழக்கு மாகாண சபை நிராகரித்திருந்தால் இந்நிலைமை வந்திருக்காது. ஆனால் பல கோடி பணம் பெற்றே கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவராக இருந்த ஜமீலின் தன்னிச்சையான அனுமதியுடன் இது நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுவும் இது விடயத்தில் ஆராயப்பட வேண்டுமென பொது சனம் எதிர் பார்க்கிறது.
Post a Comment