BREAKING NEWS

சிறு பான்மை கட்சிகள் ரணிலிடம் தஞ்சம்.

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பின்றி 20 திருத்தம்

* பல்கட்சி அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் பேணப்படும்
* சிறுபான்மை கட்சித் தலைவர்களின் அலரிமாளிகை சந்திப்பில்; பிரதமர் உறுதி
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் நேற்று உறுதியளித்தார். 20வது திருத்தம் குறித்த அதிருப்தி களை இச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதன் போதே
தன்னை சந்தித்த சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடமே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஐ.தே.க தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தனர். இச்சந்திப்பில் ஐ.தே.க சார்பில் அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, ஐ.தே.க செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் காசிம் ஆகியோர் கலந்துகொண்டி ருந்தனர்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல்முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் ஏகமனதாகத் தெரிவித்தனர். ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த யோசனைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறி யிருந்தனர்.
உத்தேச தேர்தல் முறைமாற்றமானது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளை வெளியேற்றிவிட்டு, இரண்டு பிரதான கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை சிறுபான்மையினக் கட்சியினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.
பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், உத்தேச 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் என்ன தேர்தல்முறை பிரேரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக இல்லை. எவ்வாறு தேர்தல் நடத்தப்படும் என்பதும் விளக்கமாக இல்லை. பல கட்சி ஜனநாயகமுறை இருகட்சி ஜனநாயகமுறையாக மாற்றப்படுவதை எதிர்ப்பதாகக் கூறினோம்.
உத்தேச தேர்தல் திருத்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரடியாக பாதிக்காத போதிலும், முஸ்லிம்கள் மற்றும் மலையகத்திலுள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதால் இதனை எதிர்ப்பதாகப் பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தோம். தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ்பெறப்படாவிட்டால் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரப் போவதில்லையென்பதை பிரதமர் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக முரண்பாடு இருப்பதை பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்ததாகத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல்முறை மாற்றம் பல கட்சி அரசியலை ஒழிக்கும் திட்டம் என்பதையும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமரிடம் கேடுக் கொண்டதாகக் கூறினார். இது குறித்து அமைச்சர் ரிஷாட் சோபித்த தேரரை சந்தித்து 20வது தேர்தல் திருத்த வர்த்த மானி அறிவித்தலை உடன் வாபஸ் வாங்க வேண்டியதன் அவசியத்தைச்சுட்டிக் காட்டினோம்.
அத்தோடு மைத்திரியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கு பாடுபட்ட கட்சிகளை புறம் தள்ளும் விதமாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி இந்த யோசனையையும் வர்த்தமானி அறிவித்தலையும் முற்றாக நிராகரிப்பதாக திட்டவட்டமாக அறிவித்தோம்.
அதற்கு அமைய சொபித தேரர் எமது நிலைப்பாடுகளை பூரணமாக ஏற்றுக் கொண்டு எமது நிலைப்பாட்டுக்கு என் றும் ஒத்தாசையாக இருப்பதாகவும் இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத் தினார்
அந்த அடிப்படையில் தான் நேற்று காலை பிரதமரை சந்தித்து குறித்த 20 தொடர்பில் நாங்கள் உரையாடினோம். எமது நிலைப்பாட்டையும் எமது ஆதங்கங்களை யும் உள்வாங்கிக் கொண்ட பிரதமர் எமது கோரிக்கைகளை முற்றாக ஏற்றுக் கொண்டார்.
20ஆவது திருத்தம் பல கட்சி அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்து இரு கட்சி அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப் பதாகவும், தேர்தல் மறுசீரமைப்பின் போது இவ்வாறான நிலைக்கு இது வழிவகுப்பதாய் அமைந்தால் அவ்வாறான தேர்தல் திருத்தத்தை எதிர்ப்பதாக பிரதமர் இச்சந்திப்பின் போது கூறியுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்து எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் உறுதிமொழி வழங்கியதாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar