BREAKING NEWS

75 பேர் மஹிந்த ஆதரவினரா

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் விடப்பட்ட போது அதற்கு 127 பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளமை அவசியம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 105 பேரும் மு. கா ஒருவருமாக 106 பேர் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக 95 பேரும் டக்ளஸ் தோவனந்தாவுடன் சேர்த்து 96 பேரும் உள்ளனர். த. தே. கூட்டமைப்பு சார்பாக 16 பேர் உள்ளனர். ஜேவிபி 7 பேர்.

இவர்களில் ஐதேக கூட்டு 106 பேரும் சுதந்திரக்கட்சியும் இணைந்ததன் படி மொத்தம் 202 பேர் அரச சர்பாக இருக்க வேண்டும். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு நாட்களுள் கொண்டு வரப்பட்ட முதலாவது பிரேரணைக்கு ஜேவிபி, தமிழ் கூட்டமைப்பு நீங்கலாக  202 பேரின் ஆதரவு கிடைப்பதற்கு பதிலாக 127 பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்திருப்பது நல்ல நிலையாக தெரியவில்லை.

 இந்த 127 பேரில் ஐ தே க கூட்டைச்சேர்ந்த 106 பேர் நிச்சயம் ஆதரவாகவே வாக்களித்திருப்பர். அவர்கள் போக மிகுதி 21 பேரே ஐ ம சுதந்திர முன்னணியிலிருந்து அதாவது 96 பேரிலிருந்து 21 பேரே ஆதரவாக வாக்களித்துள்ளனர். இத்தனைக்கும் சுதந்திர கட்சியை சேர்ந்த 30 பேருக்கு மேல் அமைச்சர் பிரதி அமைச்சர் என்பன வழங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையிலும் 21 பேரே ஆதரவளித்தள்ளனர் என்றால் அமைச்சுப்பதவியை கூட தாம் விரும்பவில்லை என தெரிவிப்போர் ஐ ம சு கூட்டமைப்பில் இருக்கின்றனரா ? இந்த நிலையில் அமைச்சு பதவியை பெறுவார்களாயின் எந்த வேளையிலும் அவர்கள் அதனை வீசி விடலாம்.

தோதல் காலத்தில் ஐ ம சு முன்னணி என்பது மஹிந்தவின் கட்சி எனவும், வெற்றிலைக்கு வாக்களித்தால் மஹிந்தவே பிரதமராவார் என்றுமே சொல்லப்பட்டது.  அக்கட்சி ஜனாதிபதி மைத்திரியின் கட்சி என சொல்லப்பட்ட போதும் சிறு பான்மை மக்கள் அதனை ஏற்காமல் அது மஹிந்தவின் கட்சி என்றே அதனை ஒதுக்கினர். அவர்களின் மனோ நிலையிலிருந்து பார்க்கும் போது 96ல் மைத்திரி பேச்சை கேட்கும் 21 பேர் போக மீதியாக உள்ள 75 பேர் மஹிந்த ஆதரவினரா என்று கேட்க வேண்டியுள்ளது. அதாவது த. கூட்டமைப்பு, ஜே வி பி நீங்கலாக 75 பேர் தனியாக எதிர் தரப்பில் அதாவது மஹிந்த ஆதரவாளர்களாக உள்ளனர். இது எதிர்கால பாராளுமன்றில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 75 பேரில் அரைவாசியையாவது ரணிலும், மைத்திரியும் தம் பக்கம் இழுக்க வேண்டும். இல்லாவிடில் பாராளுமன்றம் பாராளுமன்றமாக இராது, நாயும் கறிச்சட்டியும் போன்றே இருக்கும்.
-முபாறக் அப்துல் மஜீத்,
பிரதம ஆசிரியர், அல்ஜஸீறா

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar