BREAKING NEWS

எதிர்க்கட்சித்தலைவர் விவகாரம். ஜனாதிபதிக்கு உலமா கட்சி பாராட்டு

பாராளுமன்றத்தில் உள்ள எதிர் கட்சிகள் தாம் விரும்பும் ஒருவரை எதிர் கட்சித்தலைவராக நியமிக்க முடியும் என்ற ஜனாதிபதியின் கருத்து ஆரோக்கியமான ஜனநாயகமாகும் என  உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இது பற்றி; அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய அரசாங்கம் என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குமிடையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பொறுத்தவரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெயர் அங்கு இல்லை. மாறாக ஐ ம சு முன்னணியின் பெயரே உள்ளது. இந்த நிலையில் ஐ ம சு முன்னணியின் ஒரு பிரிவு தேசிய அரசுக்கு ஆதரவளிப்பட்கற்காக முழு ஐ ம சு முன்னணியும் ஆளும் கட்சியாக மாறாது. இதனை கடந்த பாராளுமன்றத்திலும் கண்டுள்ளோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஐ தே கவை சேர்ந்த இருபது பேர் அரசுப்பக்கம் தாவினர். அத்துடன் அவர்கள் தமது குழுவுக்கு ஐ தே க ஜனநாயக பிரிவு எனவும் கூறினர். இவ்வாறு பெரும் தொகையினர் அரசுக்கு ஆதரவாக மாறிய போதும் எதிர் கட்சியாக ஐ தே கட்சியே பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.  ஆக ஒரு கட்சியை சேர்ந்தோர் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிலோ அல்லது எதிர் தரப்பிலோ மாறி அமர்வதனால் அக்கட்சி ஆளும் தரப்பாகவோ எதிர் தரப்பாகவோ கருதப்படமாட்டாது.

இதனை வைத்து பார்க்கும் போது ஐ ம சு முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும், அல்லது தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு குறைவானேர் தவிர அனைவரும் அரசுடன் இணைந்தால் மட்டுமே ஐ ம சு முன்னணி எதிர் கட்சி அந்தஸ்த்தை இழக்கும். அல்லாத வரை ஐ ம சு முன்னணியே பாராளுமன்றத்தின் சட்டபூர்வமான எதிர் கட்சியாக கருதப்படும்.

இந்த நிலையில் எதிர் கட்சித்தலைவராக யார் வருவர் என்ற இழுபறிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது அதிகாரம் எதையும் பாவிக்காமல் இந்த விடயத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் விட்டுள்ளமை சிறந்ததொரு ஜனநாயக எடுத்துக்காட்டாகும். இதற்காக ஜனாதிபதியை உலமா கட்சி பாராட்டுகிறது என கலாநிதி முபாறக் மௌலவி தெரிவிததுள்ளார்.




Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar