கல்முனையில் படு தோல்வியை எதிர் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றவும் தயார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்திருப்பதன் மூலம் கல்முனை முஸ்லிம்களிடமிருந்து பறி போகும் ஆபத்து உள்ளது என அ.இ. மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது
நேற்று வரை கல்முனையை தமிழர் பிடித்து விடுவார்கள் என்பதால் மு. காவுக்கு வாக்களிக்க வேண்டும் என இனவாதத்தை கிளப்பி ஆட்சியை கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தற்போது தமிழர்களை கல்முனையின் ஆட்சியாளராக்குவதற்கு முயற்சிக்கப்போகிறது.
உண்மையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கம் மு. காவுக்கு இருந்திருந்தால் அக்கட்சியியும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பொதுச்சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம். அதனை நாமும் வரவேற்றிருப்போம்.
ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து கல்முனையின் அதிகாரத்தை பெறுவது கல்முனை முஸ்லிம்களை நிரந்தர அடிமைகளாக்கி விடும்.
உள்ளூராட்சி சபையில் மேயர் அல்லது தலைவரை நியமிக்கும் அதிகாரம் கட்சித்தலைவருக்கும் செயலாளருக்குமே உண்டு.
கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் யானையில் கேட்கிறது. யானையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஹக்கீம் சொல்வது போல் கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை அமைத்தால் யாரை மேயராக நியமிப்பது என்ற அதிகாரம் ரணிலிடமே உண்டு. ரணிலை பொறுத்தவரை தமிழ் கூட்டமைப்புக்கே முன்னுரிமை கொடுப்பவர். ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களையும் நக்குத்திண்ண வந்தவர்களாக பார்ப்பவர். அத்துடன் ரணிலை எதிர்த்து பேசும் தைரியம் ஹக்கீமுக்கு அறவே இல்லை என்பது மாயக்கல்லி மலை சிலை மூலம் தெரிந்தது.
மேயரை நியமிக்கும் அதிகாரம் கூட தற்றுணிவாக சபைக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் கடந்த மாநகரசபையில் மேயர் பிரச்சினை வந்திருக்காது.
இவ்வாறான நிலையில் கல்முனையின் மேயராக தமிழர் ஒருவரை நியமித்தாலேயே கல்முனையில் யானையின் ஆட்சியை கொண்டு வர உதவ முடியும் என்றே தமிழ் கூட்டமைப்பு சொன்னால் ரணில் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வார். ஹக்கீமும் இதனை ஏற்று சரணடைந்து விட்டு கல்முனை முஸ்லிம்களிடம் வந்து சொல்வார் ஆயிரத்தி இரண்டாவது தடவையாக முட்டாளாகி விட்டேன் என. அதன் பின் கல்முனை முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை நாம் இன்றே சிந்திக்காவிட்டால் கல்முனை பாரிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை இப்போதே எச்சரிக்கிறோம். கடந்த காலங்களில் நாம் சொன்ன பல விடயங்கள் யதார்த்தமாகியுள்ளது என்பதை மக்கள் அறிவர்.
இத்தகைய நிலையை தவிர்க்க வேண்டுமாயின் கல்முனை முஸ்லிம்கள் அனைவரும் யானைக்கு வாக்களிக்காது இன்றைய நிலையில் பெரு வெற்றியை பெறும் நிலையில் உள்ள அ.இ.ம. காங்கிரசின் மயில் சின்னத்துக்கு வாக்களித்து கல்முனையின் ஆட்சியை தமிழ் கூட்டமைப்பிடம் கொடுக்க முயலும் முஸ்லிம் காங்கிரசுக்கு பாடம் படிப்பிக்க எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.

Post a Comment