BREAKING NEWS

ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம்

2026.06.24 | ஊடக அறிக்கை: அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவியிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஹினிதும சுனில் செனெவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வு காலத்தில், ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சில முக்கிய விடயங்கள் குறித்து உங்களுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். இதன் மூலம் ஹஜ் யாத்திரையின் நிர்வாகம், ஏற்பாடுகள் மற்றும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவானதும் பயனுள்ளதுமான கலந்துரையாடலை முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன். மேலும், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் பங்களிப்பு மூலம் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தவிர்க்கவும் வழிவகுக்கும் என நம்புகிறோம்” என ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த புனித ஹஜ் யாத்திரையின் போது யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்கள் மற்றும் அவை தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள குழப்ப நிலை காரணமாக, இவ்விடயம் குறித்து அனைத்து தரப்பினரின் பங்களிப்புடனான விரிவான கலந்துரையாடல் அவசியமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது."

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar